Powered By Blogger

Saturday, December 07, 2013



துறையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். மூலவராக அங்காள பரமேஸ்வரி அருள் பாலிக்கிறார். உற்சவராக அம்மன், தாயார் வீற்றிருக்கிறார்கள். இந்த கோவிலில் சயன நிலையில் பெரியநாயகி என்ற பெயரில் அம்பிகை எட்டே முக்கால் அடியில் அருள் பாலிக்கிறாள்.
புல்லாங்குழலுடன் கூடிய கருப்பசாமி அருள் பாலிப்பதும் சிறப்பு. பிரகாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி, மதுரை வீரன் தம்பதியர், அகோர வீரபத்திரர், பாவாடைராயன், மகிஷாசுரமர்த்தினி, இசக்கி அம்மன், வாராகி, பெரியண்ணசாமி, முத்து கருப்பண்ண சுவாமி, ஸ்ரீதேவி சமேத தேங்கு பெருமாள், ராகு கால துர்க்கை சன்னதிகளும் உள்ளன.
ஒரு மண்டபத்தில் ஆறுபடை முருகன், தட்சிணாமூர்த்தி ஆகிய சாந்த சொரூப தெய்வங்களும் காட்சியளிக்கின்றனர். தினமும் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். திங்கள், வெள்ளி கிழமை மட்டும் பகல் 12 பகல் 1 மணி. விஷேச நாட்களில் கோவில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
மயான கொள்ளை:

ஆண்டு தோறும் சிவராத்திரிக்கு மறுநாள் துவங்கி 9 நாட்கள் மயானக் கொள்ளைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதனை காண வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குழந்தை வரம் வேண்டி பெண்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத் தெய்வத்தை தங்கள் ஊரில் இருந்தபடியே நினைத்துக் கொண்டால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணி வித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
மாசி பெரியண்ணசாமிக்கு பச்சை பருப்பு, பச்சை மாவு, பானகம் போன்றவை சமைக்காமலேயே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு, சயனநிலையில் பெரியநாயகி என்ற பெயரிலும் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.
உயரம் எட்டே முக்கால் அடி. இச்சன்னதியின் வாசலில் சாந்த நிலையில் மடியில் குழந்தையை வைத்த பேச்சி இருக்கிறாள். முத்துகருப்பண்ண சுவாமி வேங்கை மரத்திலும், மாசிப் பெரியண்ணசாமி சந்தனமரக் கட்டையிலும், பூதேவி, ஸ்ரீதேவி சமேத தேங்கு பெருமாள் விக்ரகங்கள் மரத்தாலும் செய்யப்பட்டதால் அபிஷேகம் செய்வதில்லை.
மாசி பெரியண்ணசாமிக்கு பச்சைபருப்பு, பச்சை மாவு, பானகம் போன்றவை சமைக்காமலேயே நைவேத்தியம் செய்யப்படுகிறது. பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைப்பதில்லை. கண்ணன் தான் புல்லாங்குழல் வைத்திருப்பான். ஆனால், புல்லாங்குழலுடன் கூடிய கருப்பசாமியை தரிசிக்கலாம். திங்கள், வெள்ளியில் மட்டும் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசய தலம்.

தல வரலாறு :
வல்லாள ராஜா என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார். அவர் பெரிய கருமி. எப்படிப்பட்ட கருமி தெரியுமா? காக்கா, குருவிகள் வயலில் உள்ள நெல் மற்றும் தானியங்களை தின்றுவிடுமே என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி அவற்றை வரவிடாமல் தடுக்கும் கருமி.
இப்படிப்பட்ட கருமிக்கு குழந்தை பிறக்குமா? ராஜ்ய பரிபாலனமே கையில் இருந்தும், எதிர்காலத்தில் அதை அனுபவிக்க பிள்ளை இல்லை. ராஜாவுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது.அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாள குழந்தை வேண்டும், என உருக்கத்துடன் வேண்டினான்.
அந்த கஞ்சனையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி குழந்தை வரம் தந்தாள். ராணி கர்ப்பமானாள். ஆனாலும் அம்பிகை தன் சோதனையை ஆரம்பித்தாள். பதினைந்து மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ராஜ தம்பதியரின் முகத்தில் கலவரம்.
அவர்கள் பேச்சியம்மனை தேடி ஓடினர். முதியவள் வடிவத்தில் வந்த பேச்சியம்மன், ராணியை அலக்காகத் தூக்கி தன் மடியில் வைத்து, ராணியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை இடுப்புக் கொடியுடன் வெளியே எடுத்தாள். பின்னர் மனமிரங்கி, சாந்த சொரூபியாகி, அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் தங்கினாள்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் அதே அம்சமாய் மூலவராக விளங்குகிறாள். திருக்கயிலை நந்தவனத்தை காவல்புரிந்து வந்த காத்தவராயனின் சேட்டை தாங்க முடியாமல் சப்தகன்னிகள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
கோபம் கொண்ட அவர், காத்தவராயனை தண்டிக்கப் புறப்பட்டார். அன்னை பராசக்தியின் பிள்ளைகளில் ஒருவனே காத்த வராயன். பிள்ளைப் பாசத்தால் உந்தப்பட்ட பராசக்தி, காத்தவராயனுக்கு வேகாச் சுடலையில் சாகா வரம் தந்தாள். காத்தவராயனின் உடல் தீயினால் வேகாது என்பது இதன் பொருள்.
வரம்பெற்ற காத்தவராயன், கொல்லி மலையில் குழந்தையாய் பிறந்தான். அங்கும் சேட்டையை தொடர்ந்தான். கடும் கோபமடைந்த சிவன் மீண்டும் அவனைத் தண்டிக்க கிளம்பினார். பராசக்தியோ அவரைத் தடுத்தார். தன்னைத் தடுத்த பராசக்தியை, தன் இடப்பாகத்தை விட்டு நீங்கும் படி சபித்தார்.
சாபம் பெற்ற பராசக்தி, விமோச னத்திற்காக பூலோகம் வந்து தவம் செய்யக் கிளம்பினாள். சிவபெருமான் அவளிடம் இருநாழி நெல்லைக் கொடுத்து, கல்லிலும் நெல் விளையும் கொல்லிமலைக்குச் சென்று அங்குள்ளோரைப் பருவம் அறிந்து பயிர்செய்யக் கூறினார்.
சிவகணங்களுடன் அன்னை பராசக்தி, அன்னை காமாட்சியாகக் கொல்லி மலைச்சாரலான புளியஞ் சோலைக்கு வந்து தவம் செய்தாள். தன் தங்கை தவம் செய்ய புறப்பட்டாள் என்பதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் மாடு மேய்க்கும் இடையனாக முத்துக்கருப்பண்ண சுவாமியாக அவதாரம் எடுத்து, மாடு கன்றுகளுடன் கொல்லி மலைச் சாரல் வந்து சேர்ந்தார்.
அன்னையின் தவத்திற்கும் பூஜைக்கும் காத்தவராயன் உதவினான். ஒருசமயம், பூஜைக்கு தேவையான பால் வேண்டி, மேய்ச்சல் நிலத்திலிருந்த இடையர்களிடம் ஐந்து கலம் பால் கேட்டான். தங்கள் தலைவரின் ஆணை இல்லாமல் தரஇயலாது என்றனர்.
கோபம் கொண்ட காத்தவராயன் கிண்ணாரம் என்ற வாத்தியத்தை இசைத்து, அதன் ஒலியால் மாடு கன்றுகளை மயக்கி, உடன் அழைத்துச் சென்றுவிட்டான். தன் மகன் மாடு கன்றுகளுடன் வருவதை கண்ட காமாட்சி காரணம் கேட்டாள். நடந்ததை கூறினான் காத்தவராயன்.
தன் அண்ணனே இடையர் தலைவனாக இங்கு வந்துள்ளார் என்பதை காமாட்சி அறிந்தாள். தன் மகனைக் கண்டித்து, மன்னிப்பு கேட்கும்படி கூறினாள். இடையர்கள் தலைவரிடம் சென்று நடந்ததைகூறினர். வந்தவன் கள்ளன் அல்ல, என் தங்கையின் மகன், என்று தலைவர் விளக்கம் அளித்தார்.
தானே பால்கொண்டு போய், கொடுத்துவிட்டு தங்கையையும், மருமகனையும் பார்த்துவிட்டு வருவதாக புறப்பட்டார். கண்ணீர்விட்ட காமாட்சியிடம், உன்னோடு நான் இருக்கிறேன் கவலைப்படாதே, தவம் செய்து வா, உன் கணவனை அடைவாய், என்று கூறினார்.
தன்னுடனேயே தங்கும்படி அவள் கூறவே, அவரும், நான் கருப்பாக இருப்பதால் என்னைக் கருப்பண்ண சுவாமி என்றும், தனியாக வந்ததால் தனிக்கருப்பு என்றும் என்னை இனி இங்குள்ள மக்கள் அழைப்பார்கள், என்றார்.
எந்நாளும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை வேண்டியபடி அருளும் அங்காள பரமேஸ்வரி துறையூர் மட்டுமின்றி சுற்றுப் புற மக்களுக்கும் காவல் தெய்வமாக காட்சி அளிக்கிறாள்.
சயன நிலையில் அம்மன் :
அம்பிகையை சயன நிலையில் காண்பதென்பது மிகவும் அரிதான ஒன்று. கோயம்புத்தூரில் கோணியம்மன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வண்டி மறிச்ச அம்மன் இப்படி விரல் விட்டு எண்ணும் அளவிலேயே சயனநிலை அம்பிகை சன்னதிகள் உள்ளன.
இவ்வரிசையில் திருச்சி மாவட்டம் துறையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சிறப்பான இடத்தைப் பிடிக்கிறாள். இதேபோல் புல்லாங் குழலுடன் கூடிய கருப்பசாமி அருள்பாலிப்பதும் சிறப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Pages